5/18/2018 12:52:21 PM
‘தினமொரு சேட்டை, பொழுதொரு பெண்’ என்று ஜாலியாக கழிந்துக் கொண்டிருந்த இயான் ஃப்ளெமிங்கின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அவரது அம்மா.
வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அந்த வயதிலேயே அப்படி ஆட்டம் போட்ட இயானுக்கு பாலியல்ரீதியான அந்தரங்க நோய் ஒன்றும் வந்துவிட்டதாம். அதற்குரிய சிகிச்சைகளை கொடுப்பதற்காகவே அவரை பள்ளியில் இருந்து பாதியில் அழைத்துக் கொண்டுவிட்டார்களாம்.
ஈத்தோன் பள்ளியில் இருந்து பாதியில் நின்றுவிட்டதால் ராயல் மிலிட்டரி கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார் இயான். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவருமே அந்த கல்லூரியில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெறுவது என்பதை பெருமைக்குரிய கவுரவமாக
கருதினார்கள்.
“குடும்ப கவுரவத்தை கப்பலில் ஏத்துறதை விட்டுட்டு ஏதாவது உருப்படியா படி” என்று இயானிடம் சீற்றம் காட்டினார் அவருடைய அம்மா.
“அப்பா செத்ததுக்கு அப்புறமா வேற ஒருத்தரோட வாழறீயே, நீ மட்டும் குடும்ப கவுரவத்தோட கொடியை உயரப் பறக்க விடுறியா?” என்று பதிலுக்கு எகிறினார் இயான்.
அவ்வளவுதான் அம்மா ஈவ் ஃப்ளெமிங் அடங்கிவிட்டார்.
ஆனால் - இரண்டாவது தந்தையாக வந்த உலகப் புகழ் பெற்ற ஓவியரான அகஸ்டஸ் ஜான் பொறுமையாக இயானை வழிநடத்த முயற்சித்தார்.
“அவனை அப்படியே விட்டுட முடியாது” என்று மனைவியை சமாதானப்படுத்தினார்.
இதன் பிறகு இயான், ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே ஓரளவுக்கு கல்வியின் அடிப்படைகளை கற்றுத் தேர்ந்தவுடன் முனிச் மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் பெற்றார். ஜெனீவாவில் படிக்கும்போது மோனிகா என்பவரோடு காதலில் விழுந்து ‘லிவிங் டூகெதர்’ முறையில் வாழ்ந்தார். இயானின் அம்மாவுக்கு இது பிடிக்கவில்லை. இருவரையும் பிரித்து, மீண்டும் லண்டனுக்கு வரவழைத்துக் கொண்டார். இதுபோன்ற செயல்களால் இயானுக்கு அம்மா என்றாலே கசப்புதான்.
அரசுப் பணிக்கு இயான் தேர்வெழுதி, தோல்வியுற்றார். மீண்டும் பழைய மாதிரி ‘மைனர்’ கணக்காக லண்டன் தெருக்களில் சுற்ற ஆரம்பிக்க, அம்மா தலையில் கையை வைத்து உட்கார்ந்துக் கொண்டார். ஒருவழியாக அரசில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் இயானுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கே உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தபிறகுதான் அதுவரையில் அவரிடம் மறைந்திருந்த எழுத்தாற்றல் வீறுகொண்டு எழுந்தது.
பணிரீதியாக மாஸ்கோவில் அவர் செய்த அசைன்மென்டுகள் இயானுக்கு இங்கிலாந்தில் நல்ல பெயர் ஏற்படுத்திக் கொடுத்தது. அப்போது ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலினை நேர்காணல் செய்ய திட்டமிட்டிருந்தார் இயான் ஃப்ளெமிங். இவரைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்வதை தவிர்க்க நேர்காணல் கொடுக்க மறுத்தார் ஸ்டாலின். அவர் கைப்பட நேர்காணல் கொடுக்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தும் இயானுக்கு கடிதம் எழுதினார்.
இவ்வாறு சாகஸமாக போய்க் கொண்டிருந்த இயானின் வாழ்க்கையில் மீண்டும் குறுக்கிட்டார் அவரது அம்மா. “குடும்ப பிசினஸை பார்த்துக் கொள்ள உடனே வா” என்று கடிதம் எழுதினார். வேண்டா வெறுப்பாக இங்கிலாந்துக்கு வந்து வங்கிப் பணியில் சேர்ந்தார். எழுத்திலும், சாகஸப் பணிகளிலும் விருப்பம் கொண்டிருந்த அவருக்கு எப்போது பார்த்தாலும் கணக்கெழுதும் வங்கிப்பணி சரிப்படவில்லை. இடையில் அரசக் குடும்பத்துப் பெண் ஒருவரோடு காதலில் ஈடுபட்டு, அந்த சர்ச்சை வேறு எழுந்தது.
இந்த சமயத்தில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
கடற்படை அதிகாரியான அட்மிரல் ஜான் ஹென்றி காட்ஃப்ரே என்பவர், இயான் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய நண்பர். ராயல் நேவியில் கடற்படை உளவுப் பணிகளுக்கு இயக்குநராக இருந்தார்.
“உன்னுடைய குடும்பப் பாரம்பரியத்தை காப்பாற்ற ராணுவத்துக்கு வா” என்று அழைத்தார்.
ஜான் ஹென்றியின் உதவியாளராக கடற்படை பணிக்கு வந்தார் இயான். இதே ஜான் ஹென்றியைதான் ஜேம்ஸ்பாண்டின் பாஸ், ‘மிஸ்டர் எம்’மாக பிற்பாடு சித்தரித்து கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவுப்படையில் இருப்பவர்களுக்கு கோட் நம்பர் கொடுப்பார்கள். ‘17F’ என்கிற கோட் எண்ணுடன் லெப்டினென்ட் ஆக இயானுக்கு பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவிக்கு தேவையான எந்தத் தகுதியும் அவரிடம் இல்லை. என்றாலும், குடும்பச் செல்வாக்கையும் அட்மிரலின் சிபாரிசையும் வைத்து பதவியைப் பிடித்தார். அடுத்த சில மாதங்களிலேயே கமாண்டர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார் என்பதெல்லாம் தனி காமெடி.
ஜான் ஹென்றிக்கு அரசு மட்டத்தில் ஏராளமான எதிரிகள் உண்டு. அவர்களை சமாளிப்பதற்கு இயானை பயன்படுத்திக் கொண்டார். அப்பாவி மாதிரி அரசின் மேல்மட்டத்தில் இருந்த அத்தனை அலுவலகங்களுக்கும் இயான் போவார். சாதாரணமாக பேச்சு கொடுத்துக் கொண்டே ஹென்றிக்கு தேவையான தகவல்களை சேகரிப்பார். எதிரிநாடுகளுக்கு உளவு பார்க்கப் போவதை விட்டுவிட்டு சொந்த நாட்டிலேயே அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
போர் தீவிரமடையத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஹென்றியின் பரிந்துரையின் பேரில் இயானுக்கு நிறைய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஜெர்மானியக் கடற்படையை தோற்கடிக்க யுக்தியான திட்டங்களை தீட்டினார். நேரடியாக போர்முனையில் வீரம் காட்டக்கூடிய அளவுக்கு இல்லாவிட்டாலும், தந்திரமான திட்டங்களை யோசித்து செயல்படுத்துவதில் கில்லாடியாக உருவெடுத்தார்.
இந்தப் போரில் இங்கிலாந்தோடு அமெரிக்காவுக்கு கூட்டணி. அமெரிக்காவுக்கு ராணுவரீதியான சில ஆலோசனைகளை கொடுக்க ஜான் ஹென்றியோடு அந்த நாட்டுக்குச் சென்றார். உளவு பார்ப்பதற்கு ஒரு தனி அலுவலகம் இருக்க வேண்டும் என்று இவர்கள் பரிந்துரை கொடுத்ததோடு மட்டுமின்றி, அந்த அலுவலகம் எப்படி செயல்படவேண்டும், என்னென்ன மாதிரியான பதவிகள், பணிகள் என்பதையெல்லாம் விரிவாக எழுதிக் கொடுத்தார் இயான்
ஃப்ளெமிங். ‘உளவு ஒரு கலை’ என்று தொடங்கி அவர் எழுதிக் கொடுத்த பரிந்துரைகள் சுவாரஸ்யமாக மட்டுமின்றி, துல்லியமாகவும் இருந்தது. இதன் அடிப்படையிலேயே தந்திர உபாயங்களை மேற்கொள்ளும் ஓர் அமைப்பை அமெரிக்கா நிறுவியது. போர்க்காலத்தில் அமெரிக்காவுக்கு பெரிதும் உதவிய அந்த அமைப்புதான் பின்னாளில் சிஐஏவாகியது.
போர்முனையில் எதிரிகளின் இடங்களுக்குள் ஊடுருவி தகவல் சேகரிக்கும் ‘No. 30 commando’ என்கிற அமைப்பை இங்கிலாந்துக்காக இயான் ஃப்ளெமிங் உருவாக்கினார். இந்தப் படையின் துல்லியமான தகவல்களால் நிலம், நீர், வானம் என்று மூன்று களங்களிலும் இங்கிலாந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தது.
இயான் ஃப்ளெமிங், துப்பாக்கி ஏந்தி எப்போதுமே களத்துக்கு சென்றதில்லை.
ஆனால் - தாக்குதல் தொடுக்க வேண்டிய இடங்களையும், திட்டங்களையும் துல்லியமாக சொல்லிக் கொடுப்பார். இயானுடைய காட்ஃபாதர் ஜான் ஹென்றிக்கு பதவி போனபிறகு, இவருடைய செல்வாக்கும் குறைய ஆரம்பித்தது.
அதன் பிறகு இவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள் பெரும்பாலும் படுமொக்கையாக அமைந்தன. பசிஃபிக் பெருங்கடலில் மாதக்கணக்கில் கப்பலில் அமர்ந்தவாறே, எதிரிகளின் நடமாட்டம் தெரிகிறதா என்று பைனாகுலரில் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில், ராணுவ வேலையில் இருந்து லட்சக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் இவரும் ஒருவர்.
இந்த போர், தான் எழுதுவதற்கு ஏராளமான அனுபவங்களை கொடுத்திருக்கிறது என்று பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு பேனாவை கையில் எடுத்தார் இயான் ஃப்ளெமிங்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment